பெருமைப்பட வேண்டிய தருணம் -பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
சதுரங்கத்தில் பிரக்ஞானந்தாவின் நட்சத்திர செயல்திறனைப் பாராட்டி ஆனந்த் மஹிந்திரா பதிவு.
உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சதுரங்க வீரர் ஆர்.பிரக்ஞானந்தா மீண்டும் உலக அரங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இம்முறை உலகின் முன்னணி சதுரங்க வீரர் மேக்னஸ் கார்ல்சனை, ஒரு பரபரப்பான டிராவில் நிறுத்தியதன் மூலம், 18 வயதேயான இந்திய திருமகன் பிரக்ஞானந்தா தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவிடம் மீண்டும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
போலந்தில் நடைபெற்ற ‘சூப்பர்பெட்’ சதுரங்கப் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கும் கார்ல்சனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதில், பிரக்ஞானந்தா அதிதிறமையையும் வாகையுணர்வினையும் வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, ’பிரக்ஞானந்தாவை பார்த்துப் பெருமை கொள்ள வேண்டிய தருணம்’ என்று அவரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர்பெட் ரேபிட் அண்ட் ப்ளிட்ஸ் சதுரங்கப் போட்டியில் சீனாவின் 'வேய் ஈ’ 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேக்னஸ் கார்ல்சென் 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பிரக்ஞானாந்தா 14.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகாய்ஸி 14 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குகேஷ் 9.5 புள்ளிகளுடன் 10-வது இடமும் வகிக்கின்றனர்.
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை சோ்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று பலதரப்பு பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.