முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஜேசன் ராய் சாதனை!

40-வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள்...

கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஜேசன் ராய் சாதனை!

40-வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

இங்கிலாந்து - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் கார்டிஃபில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்குப் பதிலாக பிளங்கெட் தேர்வாகியுள்ளார். 

2011 மற்றும் 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பவுண்டரிகளாக அடித்துத் தள்ளினார்கள். இதனால் 10 ஓவர்களில் 67 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. ஜேசன் ராய் 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் அரை சதத்தை எடுத்த பிறகு கூடுதலாக ஒரு ரன் மட்டும் சேர்த்து மொர்டஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

25 ஓவர்களில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பிறகு 92 பந்துகளில் சதத்தை எட்டினார் ஜேசன் ராய். 27-வது ஓவரில் இந்த உயரத்தை எட்டியதால் ஜேசன் ராய், இரட்டைச் சதத்தை எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 

இதனிடையே ஜோ ரூட், 21 ரன்களில் சைஃபுத்தீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 35-வது ஓவரில் ஒரு பெரிய சாதனைக்குக் குறி வைத்தார் ஜேசன் ராய்.

மெஹிடி ஹாசன் மிராஸ் வீசிய அந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர் அடித்தார் ஜேசன் ராய். இதன்மூலம் 150 ரன்களைக் கடந்தார். ரசிகர்கள் தந்த உற்சாகத்தில் ஆறு சிக்ஸர்களைத் தொடர்ச்சியாக அடிக்கவேண்டும் என்றெண்ணி, நான்காவது சிக்ஸரை அடிக்க முயன்றார். ஆனால் அது சரியாக அமையாமல் மொர்டஸாவிடம் கேட்சாக மாறியது. இதனால் 153 ரன்களில் வீழ்ந்தார் ஜேசன் ராய். 

இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 75 உலகக் கோப்பை ஆட்டங்களில் தொடக்க வீரர் அடித்துள்ள 5-வது சதம் இது. 

40-வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 30, மார்கன் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய ஆறு ஒருநாள் ஆட்டங்களில் 373, 359, 341, 351, 311, 334 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக 300 ரன்களை எடுத்துச் சாதனை புரியவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →