இங்கிலாந்து அணியில் ஓரங்கட்டப்பட்டாரா டேவிட் மலான்?
சர்வதேச போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் மலான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரரான 37 வயதான டேவிட் மலான் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்டரான டேவிட் மலான், இதுவரை 22 டெஸ்ட் (1074 ரன்கள்) மற்றும் 30 ஒருநாள் (1450 ரன்கள்), 62 டி20 (1892 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டி20 ஆட்டத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2020 ஆம் ஆண்டு பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றினார்.
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு டேவிட் மாலன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. டி20 ஒருநாள் தொடர்களிலும் டேவிட் மாலன் பெயர் நீக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த டேவிட் மாலன் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டேவிட் மாலன் கடந்த 2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே 44 பந்துகளில் 12 பௌண்டரிகள் 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் விளாசினார். அதன்பிறகு ஆசஸ் தொடரில் 227 பந்துகளில் டேவிட் மாலன் 140 ரன்கள் குவித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் கடந்து அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் இடம் பெற்றிருந்தார்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இடம் பிடித்த டேவிட் மாலன் தர்மசாலாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 பௌண்டரிகள் 6 சிக்ஸர் உள்பட 140 ரன்கள் அடித்தார்.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டேவிட் மாலன் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு எடுத்திருக்கிறார்.