முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2025 at 2:49 PM
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஏப்ரல் 20) சில்ஹட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

191 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மோமினுல் ஹாக் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 40 ரன்களும், ஜேக்கர் அலி 28 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா 3 விக்கெட்டுகளையும், மத்வீர் மற்றும் நியாச்சி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னட் 57 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, நியாஷா மயாவோ 35 ரன்களும், நிகராவா 28 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நஹித் ராணா 3 விக்கெட்டுகளையும், ஹாசன் மஹ்முத் மற்றும் காலேத் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

112 ரன்கள் முன்னிலை

ஜிம்பாப்வே அணி 273 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது வங்கதேசம். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. ஷாத்மன் இஸ்லாம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மஹ்மதுல் ஹாசன் ஜாய் 28 ரன்களுடனும், மோமினுல் ஹாக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வங்கதேசம் ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 25 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. மஹ்மதுல் ஹாசன் ஜாய் 33 ரன்களிலும், மோமினுல் ஹாக் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த நிலையில், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மற்றும் ஜேக்கர் அலி இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 103 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். ஜேக்கர் அலி 60 பந்துகளில் 21 ரன்களுடன் (3 பவுண்டரிகள்) களத்தில் உள்ளார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →