டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஷஃபாலி வர்மா 35 ரன்களும், கஷ்வீ கௌதம் 34 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளையும், லூஸி ஹேமில்டன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டார்ஸி பிரௌன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 323 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் 125 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 171 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெர்ரி 76 ரன்களும், லூஸி ஹேமில்டன் 23 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் சயாலி சத்கரே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராந்தி கௌட் மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்நே ராணா மற்றும் ஷஃபாலி வர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பிரதீகா ராவல் 63 ரன்கள் எடுத்தார். ஸ்நே ராணா 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் லூஸி ஹேமில்டன் 3 விக்கெட்டுகளையும், அன்னாபெல் சதர்லேண்ட், அலானா கிங் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டார்ஸி பிரௌன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 25 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஜார்ஜியோ வோல் 16 ரன்களுடனும், ஃபோப் லிட்ச்ஃபீல்டு 11 ரன்களுடம் களத்தில் இருந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.