3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ரெய்னா, ரோஹித் சர்மா வரிசையில் இடம்பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...
சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த 6-ஆவது இந்திய வீரர் சாதனைப் பட்டியலில் இணைந்தார் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமை(டிச. 6) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை, இந்திய அணி 39.5 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், 121 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 116 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார் ஜெய்ஸ்வால்.
இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் கடந்த 6-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சாதனைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கே. எல். ராகுல், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.