ஐசிசி தொடர்களின் அறிமுகப் போட்டிகளிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நேற்றையப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 112 ரன்கள் (12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தார்.
நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரச்சின் ரவீந்திரா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். ஐசிசி தொடர்களின் அறிமுகப் போட்டிகளிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய அவர், நேற்று சாம்பியன்ஸ் டிராபி அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.
நியூசிலாந்து அணிக்காக ஐசிசியின் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் இதுவரை ஐசிசி நடத்தும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். இதற்கு முன், 3 சதங்களுடன் இந்த சாதனையை கேன் வில்லியம்சன் தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த 5-வது வீரர் என்ற சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். அவர் 26 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் டெவான் கான்வே (22 இன்னிங்ஸ்கள்), கிளன் டெர்னர் (24 இன்னிங்ஸ்கள்), டேரில் மிட்செல் (24 இன்னிங்ஸ்கள்) மற்றும் ஆண்ட்ரூ ஜோன்ஸ் (25 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.