முகப்பு
கிரிக்கெட்

அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாததற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

Updated On : 18 ஜனவரி 2025, 7:51 pm IST
முகமது சிராஜ் (கோப்புப் படம்)
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாததற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப் பந்துவீச்சு வரிசையில் இடம்பெற்றுள்ளனர். முகமது சிராஜ் அணியில் இடம்பெறவில்லை.

Advertisement

Advertisement

ரோஹித் சர்மா விளக்கம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக புதிய பந்தில் பந்துவீசுவது மற்றும் ஆட்டத்தின் பிற்பகுதியில் பழைய பந்தில் பந்துவீசுவதுக்கு ஏற்ற மாதிரியான அணி எங்களுக்கு தேவைப்பட்டது. ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருக்கிறார். அவர் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்துவீசுவதற்காக அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்த்துள்ளோம்.

புதிய பந்தில் முகமது ஷமி எப்படி பந்துவீசுகிறார் என்பதை நாம் பார்த்தோம். இந்த இடத்தில்தான் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறித்து நாங்கள் விரிவாக ஆலோசித்தோம். அனைத்து ஆல்ரவுண்டர்களும் அணியில் விளையாடும்படி அணி இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனால், அதற்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்தோம். முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது துரதிருஷ்டவசமானது. ஆனால், எங்களுக்கு வேறு தெரிவு இல்லை.

அர்ஷ்தீப் சிங் அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவர் நீண்ட காலமாக வெள்ளைப் பந்து போட்டிகளில் (டி20 போட்டிகளில்) விளையாடி வருகிறார். அவருக்கு அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை என்பது எனக்குப் பெரிதாக தெரியவில்லை. அவர் நீண்ட காலம் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடி, கடினமான ஓவர்களை வீசியுள்ளார். அவரால் அழுத்தமான சூழல்களில் சிறப்பாக பந்துவீச முடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சில நேரங்களில் அணியில் சில வீரர்கள் இடம்பெறாமல் போகலாம். அது மிகவும் துரதிருஷ்டவசமானது. அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பது முடியாத விஷயம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments