முகப்பு
கிரிக்கெட்

2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? கங்குலி பதில்!

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவது குறித்து...

Updated On : 22 ஜூன் 2025, 4:31 pm IST
விராட் கோலி - ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது, விராட் கோலிக்கு 38 வயது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயது ஆகியிருக்கும்.

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, ஆண்டு ஒன்றுக்கு 15 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement

Advertisement

சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முழு உடல் தகுதியுடன் இருப்பது கடினம் எனவும், அவர்களால் எளிதில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துவிட முடியாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

சௌரவ் கங்குலி - படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவரும் ஒரு விஷயத்தை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து வீரர்களைப் போன்றே விளையாட்டு அவர்களை (ரோஹித், கோலி) விலகிச் செல்லும், அவர்களும் ஆட்டத்தை விட்டு விலகிச் செல்வார்கள். ஓராண்டில் 15 போட்டிகளில் விளையாடி, 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது கடினம்.

ஓய்வை அறிவிப்பது குறித்து அவர்களுக்கு கொடுக்க என்னிடம் எந்த ஒரு அறிவுரையும் இல்லை. என்னைப் போன்று அவர்களுக்கும் ஆட்டம் குறித்து நன்றாக தெரியும் என நினைக்கிறேன். அவர்களது ஓய்வு குறித்து அவர்களே முடிவெடுப்பார்கள். விராட் கோலி மிகவும் அற்புதமான வீரர். அணியில் அவருக்கு மாற்று வீரர் உருவாக நேரம் எடுக்கும் என்றார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.