இந்தியன் ப்ரீமியர் லீக்கில் (ஐபிஎல்) லக்னௌ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், பண வர்த்தக முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாயில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும், வர்த்தக (டிரேடிங்) முறையில் ஈடுபட்டு வீரர்களை வாங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரையும் வர்த்தகம் செய்து கேப்டன் சஞ்சு சாம்சனை பெற்றுக் கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னும் இந்தத் தகவல் உறுதிசெய்யப்படவில்லை.
அதேபோன்று, மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் டெண்டுல்கரை மாற்றிவிட்டு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரை வர்த்தகம் செய்துவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கரை மாற்றாமலேயே மும்பை இந்தியன்ஸ் அணி, பண வர்த்தகம் முறையில் ரூ. 2 கோடிக்கு ஷர்துல் தாக்கூரை தங்கள் அணியில் இணைத்துள்ளது.
இந்தாண்டு நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன ஷர்துல் தாக்கூர், அதன்பின்னர் லக்னௌ அணியில் காயமடைந்த மோஷின் கானுக்குப் பதிலாக மாற்றுவீரராக இடம்பெற்று 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பையைப் பூர்விகமாகக் கொண்ட ஷர்துல் தாக்கூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வெல்வதில் பங்காற்றினார்.
தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடியுள்ள ஷர்துல் தாக்கூர், 105 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளையும், 325 ரன்களையும் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.