மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தி அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
140 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.4 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 38 ரன்களும், ரோமாரியோ ஷெப்பர்டு 36 ரன்களும் எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளையும், ஜேமிசன், மைக்கேல் பிரேஸ்வெல், ஈஷ் சோதி மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரை வென்ற நியூசிலாந்து
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் அதிரடியாக 24 பந்துகளில் 45 ரன்களும் (5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்), ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் தலா 21 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஜேக்கோப் டஃபி ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.