தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயண மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், ஹார்மர் பந்து வீச்சின்போது இந்திய கேப்டன் ஷுப்மன் கில் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்களில் வெளியேறினார். அவர் கழுத்தில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடவில்லை.
அவர் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது தொடரில் இருந்து விலகுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்து அவரை விடுவிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கேப்டன் ஷுப்மன் கில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் பாதியில் விலகினார். அவருக்கு நவ.19 ஆம் தேதியில் மும்பையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனால், அவர் குவாஹாட்டியில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்காக நேற்று பயணம் மேற்கொண்டார். கில்லின் காயம் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அவர் முழுத் தகுதியைப் பெற முடியவில்லை.
இதனால், பரிசோதனைக்காக மீண்டும் அவர் மும்பை செல்லவுள்ளார். இந்திய அணியை துணை கேப்டன் ரிஷப் பந்த் வழிநடத்துவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணி 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆரம்பித்து சி.கே. நாயுடு முதல், கவாஸ்கர், கபில்தேவ், தோனி, கோலி வரிசையில், இந்திய அணியின் 38 வது கேப்டன் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.