ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வரலாறு படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வரலாறு படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய ஸ்மிருதி மந்தனா, இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார்.
இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் ஓராண்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். இந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் அவர் 1000 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார்.
19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.