உலக கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெல்லும் முதல் டி20 தொடர் இதுவாகும்.
இந்த நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும். எதிரணி யார் என்பது குறித்தும், கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது குறித்தும் சிந்திக்கவில்லை. அதனால், எங்களால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்ல முடிந்தது. ஆனால், இந்த தருணத்தில் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது இல்லை என உணர்கிறேன்.
இந்திய மகளிரணி மாற்றமடைந்து வரும் காலக் கட்டத்தில் உள்ளது. இந்தக் காலக் கட்டத்தில் இந்திய அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன். எந்த அணிக்கு எதிராக வெற்றி பெறுகிறோம், எங்கு வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே முக்கியம். சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்திய வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியான ஆட்டம் உதவியாக இருந்தது. அதிரடியாக விளையாடிய அவர் 55 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.