முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்திய நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் களமிறங்கியதால் ரசிகர்கள் ஆரவாரத்தில் இருந்தனர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆகிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 8 ரன்களில் வெளியேற, கேப்டன் ஷுப்மல் கில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் ஏமாற்றமளித்தார்.
அவருக்குப் பின்னர் வந்த விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் கவர் டிரவ் அடிக்கப் போய் கூப்பர் கொனோலியிடம் கேட்சானார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 8.1 ஓவர்களில் இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிடவே 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
ஓவர்கள் குறைக்கப்பட்டதால், இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் - கே.எல். ராகுல் இருவரும் நிதானமாக அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஷர் வெளியேற, 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து கே.எல். ராகுல் அவுட்டானார்.
அதன்பின்னர், வந்த வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களிலும், ஹர்ஷித் ராணா 1 ரன்னிலும், அர்ஷிதீப் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகியும் வெளியேறினர்.
அறிமுகப் போட்டியிலேயே அதிரடியைக் காட்டிய நிதீஷ்குமார் ரெட்டி, அட்டகாசமாக 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இந்திய அணியை 130 ரன்களைக் கடக்க வைத்தார். அவர் 19 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 38 ரன்களை எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் மிட்ச் ஓவன், ஹேசில்வுட், குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.