காயத்திலிருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசிப் போட்டியின்போது, பந்தினை கேட்ச் செய்கையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் உடனடியாக ஆடுகளத்திலிருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கேட்ச் பிடிப்பதற்காக கீழே விழுந்ததில் அடிபட்டதில் ஷ்ரேயாஸ் ஐருக்கு உள் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், காயத்திலிருந்து நாளுக்கு நாள் படிப்படியாக குணமடைந்து வருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஷ்ரேயாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: காயத்திலிருந்து குணமடைந்து நாளுக்கு நாள் நன்றாக உணர்கிறேன். நான் விரைவில் குணமடைய வேண்டும் என எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஆதரவு உண்மையில் எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. உங்களது நினைவுகளில் எனக்கும் இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
காயத்திலிருந்து முழுமையாக குணமடைய ஷ்ரேயாஸ் ஐயருக்கு 3 வாரங்கள் தேவைப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் குணமடைய இன்னும் கூடுதல் நாள்கள் தேவைப்படலாம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.