பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!
இந்திய ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பிசிசிஐ-யின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
இந்திய ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணி மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான விருதுகள் வருகிற மார்ச் 15 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ளது.
நமன் விருதுகள் எனப் பெரியடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இந்திய அணிக்காக 5 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி வீரர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும், சிறப்பாக விளையாடி வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிலையில், நிகழாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்களும் கேப்டன்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டி20, டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு 26 வயதான ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரை சமன் செய்த இந்திய அணியின் கேப்டன் கில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு இரட்டை சதம் உள்பட 754 ரன்கள் குவித்து மொத்தமாக 983 ரன்கள் குவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, சாம்பியன்ஸ் டிராபியில் 188 ரன்கள் உள்பட மொத்தமாக 490 ரன்கள் குவித்திருந்தார். ஒரே ஆண்டில் ஏழு சதங்கள், மூன்று அரைசதங்களுடன் 1764 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
சர்வதேசப் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில், 650 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும், சர்வதேச டி20 போட்டிகளில் சரியாக சோபிக்காததால் துணை கேப்டனான அவர் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.