ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்றிரவு மோதிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, கோப்பை இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் சூர்ய குமார் யாதவ் பேசியதாவது:
“நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்படாததை நான் பார்த்ததில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. கூடுதல் மகிழ்ச்சியுடனே மேடையில் வெற்றியைக் கொண்டாடினோம்.
நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறுவதில்லை என்ற முடிவு வீரர்களால் எடுக்கப்பட்டது, நிர்வாகிகளால் அல்ல. என்னுடைய கோப்பைகள் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளன. எனது அணியின் 14 வீரர்களும் பயிற்சியாளர்களுமே எனது கோப்பைகள்.
ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நான் பெற்ற போட்டி சம்பளத்தை இந்திய ராணுவத்துக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சூர்ய குமார், போட்டிகளின் சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்ற போட்டிகளுக்கு மட்டும் வழங்கப்படும் ஊதியம் ரூ. 28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.