தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடுவது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடுவது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் மற்றும் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசி அசத்தினர். டிம் டேவிட் 70 ரன்கள், தேவ்தத் படிக்கல் 50 ரன்கள், ரஜத் படிதார் 48 ரன்கள், பில் சால்ட் 46 ரன்கள் எடுத்தனர்.
Advertisement
இந்த நிலையில், தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை நீண்ட காலம் இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் வைத்திருப்பது கடினம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தேவ்தத் படிக்கல்லின் உறுதியை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது அவ்வளவு எளிது கிடையாது. வீரர்கள் பலரும் பெரிய ஷாட்டுகளை ஆட முயற்சி செய்து விக்கெட்டுகளை இழந்தனர். சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடிக்கும் வரை படிக்கல் நிதானமாக விளையாடினார். முதல் பவுண்டரி வந்த பிறகு அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.
தேவ்தத் படிக்கல் மிகவும் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் விளாசக் கூடியவர். அவர் இப்படியே தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடினால், அவரை நீண்ட காலத்துக்கு இந்திய அணியில் இடம்பெறாமல் வைத்திருப்பது கடினம். உள்ளூர் போட்டிகளில் படிக்கல் மிகவும் அதிக அளவிலான ரன்கள் குவித்திருக்கிறார். அவர் மிகவும் தரமான வீரர் என்றார்.