இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பவன் ரத்நாயகே அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். கமில் மிஷாரா 36 ரன்களும், பதும் நிசங்கா 34 ரன்களும் எடுத்தனர்.
மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இங்கிலாந்து அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் எட்டி இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்து அணியில் டாம் பாண்டன் அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 39 ரன்களும், கேப்டன் ஹாரி ப்ரூக் 36 ரன்களும் எடுத்தனர். சாம் கரண் 20 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 3) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.