இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்கா(யுஎஸ்ஏ) போராடித் தோற்றது. டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிப். 2 - பிப். 6 வரை மொத்தம் 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில், உலக சாம்பியன் இந்தியாவை எதிர்த்து அமெரிக்கா களம் கண்டது. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய அணியில், அதிகபட்சமாக தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சதமடித்தார். அவர் 55 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் அடங்கும்.
கேப்டன் ஆயுஷ் பதானி 60 ரன்களைக் குவித்தார். அடுத்து சேஸிங் செய்த அமெரிக்கா, 239 ரன்களைத் திரட்ட கடுமையாகப் போராடியது. அந்த அணியில் விளையாடிய இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 18 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பௌண்டரிகளுடன் 227.78 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டையை சுழற்றினார். அவர் 41 ரன்கள் திரட்டியிருந்தபோது கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு பின் களம் கண்ட ஹர்மீத் சிங், 277.78 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட, யுஎஸ்ஏ அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. அவர் 9 பந்துகளில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டதுடன் 2 பௌண்டரிகளுடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரது அதிரடியால், இந்திய அணியின் வெற்றி பறிபோகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தன் பங்கிற்கு 210 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய பாகிஸ்தான் வம்சாவளி வீரரான முகமது மோசினும் 21 ரன்களில் நடையைக்கட்டியதால் யுஎஸ்ஏ அணியின் வெற்றிக் கனவு பறிபோனது. இறுதியில், அந்த அணி 19.4 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா ஏ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.