ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், எங்கு நடத்தப்படும் என்பது தொடர்பாக...
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் குறைந்த பிறகே மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!
Advertisement
Advertisement
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையேயான 58-வது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகளே மீதமிருக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்துக்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்களும் தங்களது நாடுகளுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.
மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் நீடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பரில் நடத்துவதே சரியான தெரிவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மே மாதத்துக்குள் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால் இந்த மூன்று நகரங்களில் மீதமுள்ள போட்டிகள் நடத்தி முடிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களை மீண்டும் போட்டிக்காக ஒருங்கிணைக்கும் பணிகளும் இருக்கின்றன.
தற்போதுள்ள பதற்றமான சூழலில் ஐபிஎல் போட்டிகள் உடனடியாக தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பது போன்று தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் முழுமையாக குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.