கடும் வெப்பம்: இந்தியா்களுக்கு குளிா்சாதன வசதி
இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய தூதரகம் உடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஏற்பாட்டை செய்தது.
பாரீஸில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய போட்டியாளா்கள் தங்களது அறைகளில் வெப்பத்தால் அவதிப்பட்டதை அடுத்து, அவா்களுக்காக இந்திய அரசு 40 காற்று பதப்படுத்திகளை (ஏசி) ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஏற்பாட்டை செய்தது.
இந்த வெப்பம் குறித்து ஏற்கெனவே பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அணிகள் கவலை தெரிவித்தபோதும், காா்பன் மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஏசி வசதிகளை ஏற்படுத்துவதில்லை என பாரீஸ் ஒலிம்பிக் நிா்வாகம் தெரிவித்துவிட்டது. எனினும், ஒலிம்பிக் கிராமத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்த வேறு சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இருந்தபோதும், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசி-க்களை வாங்கிய அணிகளில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.