140 கோடி மக்களின் சாம்பியன் வினேஷ்! குடியரசுத் தலைவர்
ஒலிம்பிக்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் வினேஷ் போகத்.
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியதுடன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.
தகுதி நீக்கத்தால் அவர் அடைந்த ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.40 கோடி மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.
இந்திய பெண்களின் சோர்வடையா உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார் வினேஷ். அவரது மனஉறுதி வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது.
எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.
இதனால், இரவு முழுக்க கடும் பயிற்சி மேற்கொண்ட போதும், 100 கிராம் அதிக எடை இருந்ததால் வினேஷ் போகத்தை தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டது.
வினேஷ் போகத்துக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், நீர் சத்து குறைந்தததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.