டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கெளதம் கம்பீர் விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது. தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு வீழ்ந்தது.
இதையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி, 6 ஆட்டங்களில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணி கேப்டன் கெளதம் கம்பீரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் கடந்த ஐந்து ஆட்டங்களில் 85 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில், கேப்டன் பதவியிலிருந்து கெளதம் கம்பீர் விலகியுள்ளார். அணியின் மோசமான ஆட்டங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
இதையடுத்து 23 வயது ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளியன்று, டெல்லியில் நடைபெறுகிற ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்.