இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஹிமாசலப்பிரதேச மாநிலம், தரம்சாலாவில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில், முதல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா.
இதனால், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமநிலையில் உள்ளது. இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் மொத்தம் 38,000 இருக்கைகள் உள்ளன. இங்கு, மொத்தம் 6 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், முதலில் பந்துவீசிய அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த 356/9 இங்கு பதிவான அதிகபட்ச ஸ்கோர். இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து 79 ரன்களுக்குச் சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணி களமிறங்கியது.
இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்தியா:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, யுவேந்திர சாஹல்.
இலங்கை:
திசர பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், சதீரா சமரவிக்ரமா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), அசெலா குணரத்னே, சச்சித் பதிரனா, அகிலா தனஞ்ஜெயா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப்.