மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்...
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர். இருவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுகின்றனர். இவர்களும் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
Rajya Sabha elections: DMK's Trichy Siva, Ravindran file nominations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.