தர்மசாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று, மதிய உணவு இடைவேளை வரை இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹிமாசல பிரதேசம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 300 ரங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 111 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் மாத்யூ வடே அரைசதம் கடந்தார்.
இந்திய தரப்பில் அறிமுக வீரரான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டும் விளையாடி ரன் கணக்கை தொடங்காமல் இருந்தது.இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகிய இருவரின் கட்டுப்பாடான நேர்த்தியான பந்துவீச்சின் காரணமாக துவக்க ஜோடியால் விரைவாக ரன் எடுக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். இந்திய அணி இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 31 ரன்னுடனும், புஜாரா 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.