முகப்பு
செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் புதிய உத்தியை கையாளுவேன்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் புதிய உத்திகளுடன் களமிறங்க உள்ளதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் புதிய உத்திகளுடன் களமிறங்க உள்ளதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அஸ்வின், அதைத் தொடர்ந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். இதனால் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் மூலம் அவர் மீண்டும் களம் காண்கிறார்.
அதுகுறித்து மும்பையில் அவர் புதன்கிழமை கூறியதாவது:
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் புதிய உத்திகளை என்னால் வெளிப்படுத்த இயலும் என்று நம்புகிறேன். அதற்காக தகுந்த முறையில் தயாராகியுள்ளேன். நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்துடனான 2 பயிற்சி ஆட்டங்கள், சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வாறு செயல்படுவேன் என்பதை எனக்கு உணர்த்தும் ஒரு அறிகுறியாக இருக்கும்.
எனது புதிய உத்திகளானது களத்தில் ஆடும்போது எவ்வாறு முன்வருகிறது என்பதைப் பொருத்தே உள்ளது. எனவே, அந்த 2 பயிற்சி ஆட்டங்கள் அதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
30 யார்டுகளுக்கு வெளியில் 4 ஃபீல்டர்களை நிறுத்துவது உள்பட ஒருநாள் போட்டிகளில் ஐசிசி மேற்கொண்டுள்ள சில விதிமுறை மாற்றங்கள் ஒவ்வொரு பந்துவீச்சாளரையுமே வரையறை தாண்டி யோசிக்க வைத்துள்ளன. பழைய நுணுக்கங்களையே கையாளுவது பயனளிப்பதாக இருக்காது.
எனவே, போட்டியானது எவ்வாறு மாறுகிறது என்பது குறித்து அதிகம் யோசித்து அதற்கேற்றவாறு செயல்ட வேண்டும். நம்மை நோக்கி வரும் எந்தவொரு சவாலுக்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஒருநாள் போட்டிகளைப் பொருத்த வரையில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இல்லாத மைதானத்தில் களமிறங்குவதாக எண்ணியே என்னை தயார் செய்துகொள்வேன். அப்போது தான் சிறப்பாகச் செயல்பட முடியும். அதேபோல், ஒரு ஆட்டத்தில் இருக்கும்போது அதைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன்.
கடந்த சீசனானது வெற்றிகரமானதாக இருந்தது உண்மையில் ஒரு கனவு போல உள்ளது. அப்போது வீழ்த்திய விக்கெட்டுகள் யாவும் சிறந்த விளையாட்டுக்காக செய்த முயற்சிக்கான பலன்களாகும். எப்போதும் அதுபோன்ற அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறேன்.
ஐபிஎல் போட்டியானது இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்களுக்கும் பலனளிப்பதாக உள்ளது. இது தொடர வேண்டும் என்று அஸ்வின் கூறினார்.
அஸ்வினுக்கு 'சிறந்த சர்வதேச வீரர்' விருது
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான 'சிறந்த சர்வதேச வீரர்' விருது வழங்கப்பட்டுள்ளது. சியட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்த விருதை அஸ்வினுக்கு வழங்கினார்.
அஸ்வின் கடந்த 12 மாதங்களில் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற பிறகு பேசிய அஸ்வின், 'சிறுவனாக இருந்தபோது சுனில் கவாஸ்கரிடம் தான் முதல் முறையாக சென்னையில் ஆட்டோகிராஃப் பெற்றேன். இன்று அவரது கையால் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டார்' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →