இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது. இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவின் கடைசி ஆட்டம். இந்த ஆட்டம் அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக அமையவுள்ளது.
இந்நிலையில் தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு சேவாக்கின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரேந்திர சேவாக் கேட் என்றழைக்கப்படும் அந்த நுழைவாயில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கிரிக்கெட்டில் சாதனை செய்தால் இதுபோன்ற கெளரவங்கள் கிடைக்கும் என்பதை இளைஞர்கள் உணர்வார்கள் என்று இந்த விழாவில் பேசினார் சேவாக்.
எனினும் இந்த நுழைவாயிலில் உள்ள பலகையில் சேவாக்கின் பெருமைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் முச்சதம் அடித்த ஒரே இந்தியர் என எழுதப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் சேவாக்கை மட்டும் முச்சதம் அடித்த ஒரே இந்தியர் என்று தகவல் பிழையுடன் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால் தில்லி கிரிக்கெட் சங்கத்த்தின் மீது விமரிசனங்கள் எழுந்துள்ளன.
இருமுறை முச்சதம் அடித்த ஒரே இந்தியர் என சேவாக்கின் பெருமையை எழுதுங்கள். அதுதான் பொருத்தமானது.