இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது இந்திய வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நேற்று அலெக்சீன்கோ கிரிலுக்கு எதிரான 7-வது சுற்றை டிரா செய்த பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 8 பேருடன் இணைந்து 2-ம் இடத்தில் நீடிக்கிறார். நார்வேயைச் சேர்ந்த டரி ஆர்யன் 6 புள்ளிகளுடன் தனி ஆளாக முன்னிலை பெற்றுள்ளார்.
தனது 8-வது சுற்றில் 2-ம் இடத்தில் உள்ள கிராண்ட் மாஸ்டர் லியாங் அவொண்டரைச் சந்திக்கிறார் பிரக்ஞானந்தா. ஏற்கெனவே இரு கிராண்ட் மாஸ்டர்களை இப்போட்டியில் தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு இந்தச் சுற்று சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் பிரிவில் இந்தியாவின் அகான்க்ஷாவும் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் 7 சுற்றுகளின் முடிவில் 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்கள்.
இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.