முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானில் டி20 போட்டியில் விளையாட மறுத்து கடிதம் கொடுத்த இலங்கை அணி! 

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர்கள் மறுத்து விட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

கொழும்பு: பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர்கள் மறுத்து விட்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணி 2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்பொழுது   அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் அணிகள் எதுவும் அந்நாட்டுக்கு செல்ல மறுத்து வருகின்றன.

இதன் காரணமாக அந்நாடு தனது சொந்த மண்ணுக்கு பதிலாக போட்டிகளை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தினை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி தற்பொழுது அங்கு இலங்கை அணி பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

இதன் கடைசி டி20 ஓவர் போட்டியினை மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் (அக்டோபர் 29–ந்தேதி) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை வீரர்கள் தயங்குகிறார்கள்.

தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் அனைவரும் சேர்ந்து கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்துள்ளனர்.

அதில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தாங்கள் விரும்பவில்லை என்றும், லாகூர் டி20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக மூன்றாவது ஆட்டமும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்கு, இலங்கை அணியின் இந்த கடிதம் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →