தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் போது ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியும், இந்திய இன்னிங்ஸின்போது கேப்டன் கோலி 129 ரன்கள் விளாசியும் அணியின் வெற்றிக்கு அடிக்கோலினர். கோலி 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார் முன்னாள் வீரர் சேவாக். அப்போது அவரிடம் கோலி எத்தனை ஒருநாள் சதங்கள் எடுப்பார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சேவாக், 62 சதங்கள் என்றார்.
நேற்றைய சதம், விராட் கோலியின் 35-வது ஒருநாள் சதம். அவர் 208 ஒருநாள் ஆட்டங்களில் 9588 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக ஒருநாள் சதங்கள்
சச்சின் - 49 (452 இன்னிங்ஸ்)
கோலி - 35 (200)
பாண்டிங் - 30 (365)
ஜெயசூர்யா - 28 (433)
ஆம்லா - 26 (161)