முகப்பு
செய்திகள்

கடினமான ஆடுகளத்தில் இந்திய அணி அபார தடுப்பாட்டம்!

100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:05 PM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் புதன்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் முடியும் முன்பாகவே 77 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கோலி 54, புஜாரா 50 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 7 ரன்களே முன்னிலை பெற்றது அந்த அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா வியாழக்கிழமை முடிவில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. விஜய் 13, ராகுல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்கள். ராகுல் 16 ரன்களுடன் பிலாண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த புஜாரா 1 ரன்னுடன் மார்கல் பந்துவீச்சில் வெளியேறினார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருப்பதோடு அதிலுள்ள விரிசல்களால் பேட்டிங் செய்வது ஆபத்தானதாகவும் இருந்தது. பலமுறை பேட்ஸ்மேன்களின் கைகளைப் பந்து பதம் பார்த்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மை குறித்து நடுவர்கள் மிகவும் தீவிரமாகவும் விவாதித்தார்கள். 

100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் உணவு இடைவேளையின்போது 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை ரபாடா க்ளீன் போல்ட் செய்தார். 

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 27 ரன்களுடன் களத்தில் உள்ளார். 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 93 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.