முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டத்தைச் சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரை!

நாட்டில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றுக்குச் சட்ட அங்கீகாரம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

நாட்டில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றுக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்குமாறு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

முன்னதாக, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில், நமது நாட்டில் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகிய விஷயங்களை சட்டபூர்வமாக்க சாத்தியக் கூறு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி,  நீதிபதி செளகான் தலைமையிலான சட்ட ஆணையம் தயாரித்துள்ள அறிக்கையில், ‘விளையாட்டுகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை முறைப்படுத்தி, சட்ட அங்கீகாரம் அளிப்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்; இதன் மூலம் கருப்புப் பணம் உருவாவதையும் தடுக்க முடியும். இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு முறைப்படி உரிமம் அளித்து, அவர்களது ஆதார், பான் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். 

Advertisement

சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்மூலம் சட்ட விரோதக் கும்பல்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கின்றன. இதனால் கருப்புப் பணம் அதிகமாகிறது. சூதாட்டத்துக்கு அனுமதி அளித்து வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம். இதன்மூலம் அரசுக்கு வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது. ' என்பன போன்ற பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இப்பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் சட்ட ஆணைய உறுப்பினரான சிவகுமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கும் தடை விதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments