இந்திய வீராங்கனை மந்தனா அதிரடி டி20 அரை சதம்: புதிய சாதனை படைத்தார்!
கியா சூப்பர் லீக் (வுமன்ஸ் கிரிக்கெட் லீக்) போட்டியில் அதிரடியாக அரை சதமெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்...
இந்திய வீராங்கனை மந்தனா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கியா சூப்பர் லீக் (வுமன்ஸ் கிரிக்கெட் லீக்) போட்டியில் அதிரடியாக அரை சதமெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் டாண்டனில் நடைபெற்ற டி20 ஆட்டம் மழை காரணமாக 6 ஓவராகக் குறைக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த 22 வயது இடக்கை வீராங்கனையான மந்தனா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். 18 பந்துகளில் அரை சதமெடுத்த மந்தனா புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு நியூஸிலாந்தின் டெவைன், 2015-ல் இந்தியாவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியில் 18 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு அவர் 22 ரன்களில் 70 ரன்கள் எடுத்தார். அந்தச் சாதனையைத் தற்போது மந்தனா சமன் செய்துள்ளார். இதையடுத்து ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிவேக அரை சதமெடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் டெவைனுடன் மந்தனாவும் இடம் பிடித்துள்ளார்.
இதனால் அவர் அணியான வெஸ்டர்ன் ஸ்டார்ம், 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் குவித்தது.
Advertisement
கடினமான இந்த இலக்கை எதிர்கொள்ளமுடியாத லைட்னிங் அணி, விக்கெட் எதையும் இழக்காமல் இருந்தாலும் 67 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கியா சூப்பர் லீக் போட்டியில் அதிவேக அரை சதமெடுத்தவர் என்கிற பெருமையையும் மந்தனா பெற்றுள்ளார். இதற்கு முன்பு, கடந்த வருடம், ரேச்சல் பிரீஸ்ட் 22 பந்துகளில் அரை சதமெடுத்தார்.