மனைவி குற்றச்சாட்டுகளை முறையாக விசாரியுங்கள்: முகமது ஷமி வேண்டுகோள்
தன் மீது மனைவி தெரிவித்துள்ள புகார்களை முறையாக விசாரிக்குமாறு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்கு முகமது ஷமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. போதிய விசாரணைக்குப் பின்னர் மட்டும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும். எனவே அதுகுறித்து எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை.
Advertisement
நாளுக்குநாள் என் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. எனவே அதற்கான விளக்கங்களை தொடர்ந்து அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உரிய முறையில் விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.