சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டார். வார்னரும் இந்த வருடம் விளையாட முடியாத நிலையில்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட், 9 மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய 3 வீரர்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை தடை விதித்தது.
ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு பிசிசிஐ விதித்துள்ள தடை குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்தார். அப்போது, 'ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் அந்த இரு வீரர்களுக்கும் ஓராண்டு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் நடவடிக்கையை கவனித்தோம். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் ஸ்மித், வார்னர் இருவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது' என்றார்.
பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கண்ணா, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) அமிதாப் செளதரி ஆகியோர் அடங்கிய குழு ஸ்மித், வார்னர் இருவரையும் தடை செய்ய முடிவெடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டார். வார்னரும் இந்த வருடம் விளையாட முடியாத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியூஸிலாந்தின் 27 வயது கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியைத் தவிர இதர ஏழு அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக உள்ளார்கள்.