ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய்யை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுத்திக்கு முந்தைய சுற்று போட்டி ஒன்றில் இந்திய வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்.எஸ்.பிரணாய் நேருக்கு நேர் மோதினர். இதன் முதல் செட்டை பிரணாய் 18-21 என கைப்பற்றினார். இதையடுத்து, எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த் 2-ஆவது செட்டை கைப்பற்றும் நோக்கில் விளையாடினார். அவருக்கு சரிசமமாக பிரணாய்யும் ஈடுகொடுத்து விளையாட இந்த செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2-ஆவது செட்டை ஸ்ரீகாந்த் 30-29 என கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது செட் வந்தது. 2-ஆவது செட்டை கைப்பற்றிய அதே புத்துணர்ச்சியுடன் 3-ஆவது செட்டையும் ஸ்ரீகாந்த் 21-18 என கைப்பற்றினார். இதன்மூலம், 18-21, 30-29, 21-18 என கைப்பற்றிய ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 7 நிமிடங்களுக்கு நீடித்தது.
மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மாவும் சீன வீரர் சென் லாங்கை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் ரான்கிரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா சீன தைபே ஜோடியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.
மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை சங் ஜி ஹ்யூனை இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறார்.