ஆணவப் போக்குடன் யாரையும் மதிப்பதில்லை : கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீது தன்னாட்சி அமைப்பு விமரிசனம்
அமைப்பு முன்வைத்துள்ள 42 பரிந்துரைகளில் 41-ஐ ஏற்றுக்கொண்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஒன்றை மட்டும்...
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, பந்தைச் சேதப்படுத்தியதாக ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தி மூவருக்கும் ஓராண்டு தடை விதித்தது. மூவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து என்கிற சிட்னியைச் சேர்ந்த எதிக்ஸ் செண்டர் என்கிற தன்னாட்சி அமைப்பு ஆய்வு நடத்தி தனது ஆய்வறிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அமைப்பு முன்வைத்துள்ள 42 பரிந்துரைகளில் 41-ஐ ஏற்றுக்கொண்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஒன்றை மட்டும் நிராகரித்துள்ளது.
ஆணவப்போக்குடன் கட்டுப்படுத்தும் தன்மையுடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடந்துகொள்வதால் வெற்றிக்காகத் தவறான வழிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பந்தைச் சேதப்படுத்திய சம்பவத்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா மிகவும் ஆணவப்போக்குடன் யாரையும் மதிப்பதில்லை. இதனால் தாங்கள் பண்டமாகப் பார்க்கப்படுவதாக வீரர்கள் எண்ணுகிறார்கள் என்று கடும் விமரிசனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, 3 நபர் கொண்ட நெறிமுறைகள் ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் தங்களுடைய செயல்களுக்கு கிரிக்கெட் வீரர்களும் நிர்வாக உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்றும் ஒரு தீர்வாக இதைக் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
இதுபோன்ற அளிக்கப்பட்ட 42 பரிந்துரைகளில் 41 பரிந்துரைகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் சர்வதேச வீரர்கள், டி20 சர்வதேச ஆட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற பரிந்துரையை மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கவில்லை.
இப்பரிந்துரைகள் பொதுத்தளத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், நாங்கள் போட்டி மனப்பான்மையுடனும் நியாயமாகவும் போட்டியிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.