முகப்பு
செய்திகள்

தென் தமிழகத்தின் விளையாட்டு நகரமாகிறது நெல்லை!

பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் அருகே அமையவுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம்  முழு அளவில் செயல்படத் தொடங்கும்போது தென் தமிழகத்தின் விளையாட்டு

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் அருகே அமையவுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம்  முழு அளவில் செயல்படத் தொடங்கும்போது தென் தமிழகத்தின் விளையாட்டு நகரமாக திருநெல்வேலி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலியை அடுத்த அபிஷேகப்பட்டியில் உள்ளது.  இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டு கிராமத்துக்காக பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் அருகே 178 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
முதற்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நீச்சல் குள வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 50 மீ. நீளம், 25 மீ. அகலம் கொண்ட 10 பந்தய பாதைகளுடன் கூடிய நீச்சல் குளம், 25 மீ. நீளம், 13 மீ. அகலம் கொண்ட பயிற்சி நீச்சல் குளம், வீரர், வீராங்கனைகள் உடை மாற்றும் அறை, பயிற்சியாளர் அறை, உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அமையவுள்ளன.  
தமிழகத்தில் தற்போதைய நிலையில் சென்னை வேளச்சேரியில் மட்டுமே  சர்வதேச தரத்திலான நீச்சல்குளம் உள்ளது. இதனால் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராம நீச்சல் குளம் அடுத்த 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்போது, இங்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.  இதன்மூலம் தென் தமிழகத்தில் இருந்து நீச்சல் சாதனையாளர்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும்.
திட்ட மதிப்பீடு: இது தொடர்பாக பல்ககலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறியதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சாந்தி நகர் விளையாட்டு கிராமத்தில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கு, நீச்சல் குளத்துடன் கூடிய உள்விளையாட்டரங்கு, பார்வையாளர் மாடங்களுடன் கூடிய திறந்த வெளி விளையாட்டு மைதானம், டென்னிஸ்,  ஸ்குவாஷ், கூடைப்பந்து, வாலிபால் விளையாட்டு மைதானங்கள், ஃபிபா தரத்திலான இயற்கை புற்களுடன் கூடிய கால்பந்து மைதானம், விடுதிகளுடன் கூடிய விளையாட்டு அகாதெமி மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக ரூ.108 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட அமைச்சகம், ஒவ்வொரு மைதானமும் எவ்வளவு பரப்பில் அமைகிறது, அதில் என்னென்ன வசதிகள் இடம்பெறுகின்றன, அதற்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு என்ற முழுவிவரம் மற்றும் வரைபடத்துடன் அனுப்புமாறு கேட்டுள்ளது. கட்டடக் கலை நிபுணர்கள், விளையாட்டுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு வரைபடத்துடன் கூடிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 
சாம்பியன்களை உருவாக்க வேண்டும்: நீச்சல் குளத்துக்கு மாநில அரசு ரூ.5 கோடி ஒதுக்கிவிட்டதால், அதைக் கட்டும் பணி தொடங்கிவிட்டது. அந்தப் பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடைந்து நீச்சல்குளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். லண்டனில் உள்ள லாப்ஃபோரோ பல்கலைக்கழகத்தைப் போன்று சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் சர்வதேச தரத்திலான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. லாப்ஃபோரோ பல்கலைக்கழகத்தில் இருந்துதான் ஏராளமான ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாகிறார்கள். அதேபோன்று சாந்தி நகர் விளையாட்டு கிராமத்தில் இருந்தும் ஏராளமான சாம்பியன்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் கனவு என்றார்.  
தென் தமிழகத்துக்கு வரப்பிரசாதம்!
இன்றளவிலும் தென் தமிழகத்தின் கிராமங்களில் திறமையான விளையாட்டு வீரர்கள் பலர் இருந்தபோதிலும், அவர்களில் மிகக் குறைவானவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவு. எந்த விளையாட்டானாலும், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்றால் மட்டுமே தரமான பயிற்சியும், போதிய வாய்ப்பும் கிடைக்கும் என்ற நிலை காணப்படுகிறது. 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம் செயல்படத் தொடங்கும்போது,  அந்த நிலை மாறும். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு மையமாக சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம் தேர்வு செய்யப்பட்டால், இங்கு ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளுக்காக ஏராளமானோர் பயிற்சி பெற வருவார்கள். அது தென் தமிழக இளைஞர்களை ஈர்க்கும். அதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.