முகப்பு
செய்திகள்

புதிய சர்ச்சை: இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களில் இருந்து விலகிய ரஸ்ஸல்!

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல்...

Updated On : 3 ஆகஸ்ட், 2019 at 4:38 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:13 PM

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

இடது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் அணி விளையாடிய பல ஆட்டங்களில் ரஸ்ஸலால் பங்கேற்க முடியவில்லை. உலகக் கோப்பையில் அவர் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு கிளோபல் டி20 கனடா போட்டியில் அவர் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் முழு உடற்தகுதி இல்லாததால் தன்னால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால், அடுத்த செவ்வாய் கிழமை கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் மட்டும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

Advertisement

ரஸ்ஸலுக்குப் பதிலாக 32 வயது ஜேசன் முகமது மே.இ. தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவருடைய இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் வான்கோவர் நைட்ஸ் அணிக்காக எட்மாண்டன் ராயல்ஸ் அணிக்கு எதிரான கிளோபல் டி20 கனடா ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார் ரஸ்ஸல். பந்துவீச்சில் ஈடுபடாத அவர், பேட்டிங் மட்டும் செய்தார். எனினும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் அவர் வேண்டுமென்றே கிளோபல் டி20 கனடா போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் பங்கேற்க மறுத்துள்ளார் என்று அவர் மீது விமரிசனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், மே.இ. தீவுகள் அணி கேப்டன் கார்லோஸ் பிராத்வெயிட், ரஸ்ஸலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக விளையாட ரஸ்ஸல் ஆர்வமாக இருந்தார். ஆனால் மீண்டும் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.