77-க்கு சுருண்ட இங்கிலாந்து: இரட்டைச் சதம் விளாசிய மே.இ.தீவுகள் கேப்டன்
கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இரட்டைச் சதம் விளாசினார். 229 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் குவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிாலந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 23 முதல் 27 வரை பார்பேடாஸின் பிரிட்ஜ்டவுன் பகுதியில் அமைந்துள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷிம்ரோன் ஹெத்மேயர் அதிகபட்சமாக 81 ரன்கள் சேர்த்தார். ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 77 ரன்களுக்குச் சுருண்டது. கீமர் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
Advertisement
இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இரட்டைச் சதம் விளாசினார். 229 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் குவித்தார்.
விக்கெட் கீப்பர் ஷேன் டௌரிச் சதமடித்தார். 224 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 116 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றது.
628 என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றிபெற 572 ரன்கள் தேவைப்படுகிறது.