நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
மெளண்ட் மெளன்கனியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஏமி சட்டர்த்வைட், சிறப்பாக விளையாடி 71 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும் பிஸ்ட், சர்மா, பூணம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.
இந்திய மகளிர் அணி 35.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து இந்த ஆட்டத்தை வென்றது. மந்தனா 90 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 3 ஆட்டங்கள் உள்ளன. இந்நிலையில் ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. மூன்றாவது ஒருநாள் ஆட்டம், ஹேமில்டனில் பிப்ரவரி 1 அன்று நடைபெறவுள்ளது.