உலகக் கோப்பை தொடருடன் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 14-ஆம் தேதி கோப்பையை வெல்லும் பட்சத்தில், அந்த இடத்தில், அந்தச் சூழலில் தோனி ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென முடிவெடுத்தவர். அதுபோன்று இந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. தோனியின் முடிவை எவராலும் கணிக்க இயலாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று தெரியாது. ஆனால், அடுத்தபோட்டிக்குள்ளாக நான் ஓய்வு பெற வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர் என்று கூறியதாக ஏபிபி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே உலகக் கோப்பைக்கு பிறகும் தோனி சிறிது காலம் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019 உலகக் கோப்பைத் தொடரில் தோனி இதுவரை விளையாடியுள்ள 7 இன்னிங்ஸ்களில் 93 ஸ்டிரைக் ரேட் உடன் மொத்தம் 223 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இதர பேட்ஸ்மேன்களை விட சுழற்பந்துக்கு எதிரான தோனியின் ஸ்டிரைக் ரேட் மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
4-ஆவது உலகக் கோப்பையில் விளையாடி வரும் தோனிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.