நான் செய்த தவறுகளை செய்ய வேண்டாம் என்று இளம் வீரர்களுக்கு அறிவுறுத்துவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இளைய வீரர்களுடன் நான் ஒவ்வொரு முறை பேசும்போதும், நான் செய்த தவறுகளை செய்ய வேண்டாம் என்று தான் அறிவுறுத்துவேன். ஏனென்றால் அடுத்தவர்களை ஊக்குவிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொருவருக்குமான இடத்தை வழங்கி அவர்களை முழுமையாக செயல்பட வைக்க விரும்புவேன். ஒருவேளை அங்கே அவர்களுக்கு எதாவது குழப்பம் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண உதவுவேன்.
அப்போது கூட களத்தில் அவர்கள் இதுவரை செய்தது என்ன? அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? எனவே இனி செய்ய வேண்டியது ஆகியவை குறித்து மட்டுமே தெளிபடுத்துவேன். ஒரு வீரர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளுமாறு கூறுவேன். அந்த தவறுக்காக அவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டை இழக்க வேண்டாம் என்று எச்சரிப்பேன். அவர்களை மேலும் சிறப்பாக செயல்படுமாறு ஊக்கப்படுத்துவேன்.
சில தவறுகளை செய்யும் போது அது சுட்டிக்காட்டப்பட்ட உடன் நம்மால் எளிதில் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், நாம் முழுவதுமாக வீழ்த்தப்படும்போது அதை ஏற்க மனம் மறுக்கும். இருப்பினும் அதில் நமது கடின உழைப்பு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த தோல்வியில் இருந்து கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
எனது சொந்த வாழ்க்கையிலேயே தோல்விகளில் இருந்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அளவில் நான் வீழ்ந்ததுதான் என்னை மேலும் உயரச் செய்தது. இன்று நான் ஒரு சிறந்த மனிதனாக உருவாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வெற்றியை விட வாழ்வில் அதுபோன்ற தருணங்களின் முக்கியத்துவத்தை உணர வைத்தது.
உங்களிடம் நெருங்கிப் பழகிய சிலர் உங்கள் தோல்வியின் போது ஒதுங்கிவிடுவார்கள். எனவே எத்தனை பெரிய தோல்விகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். அதுதான் உங்களின் தனித்துவத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.