பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 7 முறை நேருக்கு நேர் மோதியள்ளன. இதில் 7 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றிபெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 11,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். மேலும் 11,000 ரன்களை கடக்கும் 9-வது சர்வதேச வீரர் மற்றும் 3-வது இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல், போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டபோது விராட் கோலி வானத்தைப் பார்ப்பது போன்ற புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டதாக அமைந்தது.
இந்நிலையில், அந்தப் புகைப்படத்துடன் தனது குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றை இணைத்து, 90-களில் இருந்தே நான் இதை செய்து வருகிறேன் என்று விராட் கோலி பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.