முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் நம்பர் 10 பாட்மிண்டன் வீரரான டென்மார்கைச் சேர்ந்த ஜோசிம் பெர்சனுக்கு சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு 18 மாதங்கள் விளையாடுவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. தன்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய தரகர்கள் அழைத்தது தொடர்பாக சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பிடமும் அவர் தெரியப்படுத்தவில்லை.
விதிமுறைகளை மீறியுள்ளதால் அவருக்கு 18 மாதங்கள் பாட்மிண்டன் விளையாட தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், 4,500 அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு மே மாதம் மலேசியாவைச் சேர்ந்த 2 பாட்மிண்டன் வீரர்களுக்கு முறையே தலா 20 மற்றும் 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.