இந்திய மகளிர் அணி பங்கேற்ற ஒருநாள் ஆட்டம்: நேரலை இல்லாமல், ஸ்கோர் விவரம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு!
ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் தோற்கடித்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி.
நார்த் சவுண்டில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் தோற்கடித்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டாஃபானி டெய்லர் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதமடிக்க அவர் சிக்ஸர் அடிக்க முயன்றபோது கெளரின் அட்டகாசமான கேட்சினால் வெளியேறினார். தொடக்க வீராங்கனை நடாஷா மெக்லீன் 51 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணித் தரப்பில் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய மகளிர் அணி நிதானமாக இலக்கை நோக்கி நகர்ந்தது. இந்த அணுகுமுறை கடைசி ஓவர்களில் சிக்கலை அளித்தது. தொடக்க வீராங்கனை பிரியா புனியா 107 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். ரோட்ரிகஸ் 41 ரன்கள் எடுத்தார். 40-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இந்திய மகளிர் அணி. ஆனால் கடைசி 8 விக்கெட்டுகளை 54 ரன்களுக்கு இழந்ததால் வெற்றி பெற முடியாமல் போனது. கடைசி ஓவரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 9 ரன்கள் தேவைப்பட்டன. மே.இ. தீவுகள் சுழற்பந்துவீச்சாளர் அனிசா முகமது கடைசிப் பந்தில் எடுத்த விக்கெட் உள்பட மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் எடுத்து மே.இ. தீவுகள் அணிக்கு ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியைக் கொடுத்தார்.
இந்த முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியாவில் நேரலைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இணையத்திலும் இந்தியாவில் பார்க்க முடியாததால் ரசிகர்கள் பலரும் பிசிசிஐக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். இந்திய மகளிர் அணிக்கான பிசிசிஐ ட்விட்டர் கணக்கிலும் ஸ்கோர் நிலவரம் தெரிவிக்கப்படாததால் ரசிகர்களின் பலத்த கண்டனத்துக்கு ஆளானது பிசிசிஐ.
இந்தியாவில் பார்க்க முடியாத இணைய நேரலை ஒளிபரப்பு