சச்சினுக்குப் பிடித்த 5 ஆல்ரவுண்டர்கள்
இந்த 5 ஆல்ரவுண்டர்களைப் பார்த்து வளர்ந்த நான், பிறகு அவர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது...
தனக்குப் பிடித்த 5 ஆல்ரவுண்டர்களின் பெயர்களைக் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உலகின் தலைசிறந்த 5 ஆல்ரவுண்டர்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர்களில் ஒருவர் கபில் தேவ். அவருடன் இணைந்து நான் விளையாடியுள்ளேன். அடுத்ததாக இம்ரான் கான். என் முதல் சுற்றுப்பயணத்தில் இம்ரானுக்கு எதிராக விளையாடினேன். அடுத்ததாக ரிச்சர்ட் ஹாட்லி. எனது 2-வது சுற்றுப்பயணத்தில் ஹாட்லிக்கு எதிராக விளையாடினேன். கடைசி இருவரான மால்கம் மார்ஷல், ஐயன் போத்தம் ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். இந்த 5 ஆல்ரவுண்டர்களைப் பார்த்து வளர்ந்த நான், பிறகு அவர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது என்று கூறியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் குறித்து சச்சின் கூறியதாவது:
இத்தனை வருடங்களாக நான் நன்றாக இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். இப்போது அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறுகிறேன். கரோனா பாதிப்பு நிலவும் இச்சமயத்தில் வீட்டுக்குள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். நான் ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியது போல அவர்களும் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறினார்.